சென்னை மாவட்டத்தில் உள்ள வங்கி ஏ.டி.எம்-களில் பணம் செலுத்தும் பணியை தனியார் நிறுவனம் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தினர் லட்சக்கணக்கான பணத்தை ஒரு வேனில் எடுத்து சென்று ஏடிஎம் மையங்களில் நிரப்புவது வழக்கம். அப்படி பணத்தை எடுத்து செல்லும்போது துப்பாக்கி ஏந்திய காவலாளி ஒருவர் உடன் இருப்பார். அவரது கையில் இரட்டைக் குழல் துப்பாக்கி இருக்கும். நேற்று காலை தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்க்கும் ராணா குமார்(30) என்பவர் துப்பாக்கியை தனது வலது பக்க இடுப்புக்கு நேராக வைத்து சுத்தம் செய்ததாக தெரிகிறது.

அந்த துப்பாக்கி லாக் செய்யப்படாமல் இருந்ததால் தவறுதலாக கைபட்டு துப்பாக்கி வெடித்தது. அதிலிருந்து வெளியேறிய குண்டு ராணா குமாரின் வலது பக்க இடுப்பில் துளைத்து வெளியேறியதால் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு கீழ்பாகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து ராணாகுமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறிந்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.