தமிழகத்தில் அரசு வேலை பெற வேண்டும் என்றால் கட்டாயம் அரசு வேலை வாய்ப்புகள் பதிவு செய்ய வேண்டியது அவசியம். அவ்வாறு பதிவு செய்ததை மூன்று வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.தற்போது அரசு பணிகளுக்கு கடும் போட்டி நிலவி வருவதால் கல்வித் தகுதிகளுக்கு ஏற்றவாறு டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதி உடையவர்களுக்கு அரசு பணிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலைவாய்ப்பு பதிவு செய்வது கட்டாயம்.

இந்நிலையில் தமிழக முழுவதும் 66 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 18 வயதிற்கு கீழ் 17,65,888 பேர், 19 வயது முதல் 30 வயதிற்குள் 28 லட்சத்து 43 ஆயிரத்து 792 பேர், 31 வயது முதல் 45 வயதிற்குள் 18 லட்சத்து 32,990 பேர், 46 முதல் 60 வயதிற்குள் 2 லட்சத்து 36 ஆயிரத்து 756 பேர், 60 வயதுக்கு மேற்பட்டோர் 6111 பேர் வேலை வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். இதில் ஆண்கள் 31,07,600 , பெண்கள் 35,77,671, மூன்றாம் பாலினத்தவர்கள் 266 பேர் என அரசு தெரிவித்துள்ளது.