தமிழகத்தில் முதன் முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி வருகின்ற ஜனவரி 16ஆம் தேதி முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த புத்தக கண்காட்சிக்கு பள்ளி கல்வித்துறையின் பொது நூலக இயக்கம்,தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர். இதுதான் உலகின் பெரிய புத்தக கண்காட்சியாக விளங்குகிறது. திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு இதனை தொடங்கி வைக்கிறார்.

இந்த புத்தக கண்காட்சி நிறைவு விழா புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறும். தமிழில் உள்ள சிறப்பு படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் உள்ள மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக உலகெங்கும் உள்ள சிறந்த புத்தகங்களை தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சர்வதேச புத்தகக் காட்சி நடத்தப்பட உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகக் காட்சியை பார்வையிட பொது மக்களுக்கு மாலை 4 மணி முதல் 7 மணி வரை அனுமதி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.