மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் பாதுகாப்பு தொடர்பான வழக்கு விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் மலை வாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களை கூடுதலாக 10 ரூபாய் விற்றுவிட்டு பிறகு காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது அந்த தொகையை திரும்ப வழங்கலாம் என்று யோசனை தெரிவித்தது.

மேலும் காலி பாட்டில்களை திரும்ப பெரும் இந்த திட்டத்தை கொடைக்கானல், ஏற்காடு, கொல்லிமலை, மேகமலை, ஏலகிரி உள்ளிட்ட மலைவாச ஸ்தலங்களிலும் தேசிய பூங்காக்கள், சரணாலயங்களிலும் அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் கோவை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் நவம்பர் 15 முதல் இரண்டு மாதங்களுக்கு அமல்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தது.

நேற்று இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் பாட்டில்களை சேகரித்து வைப்பதற்கு காலி இடத்தை கண்டறிவது, ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பது உள்ளிட்ட அவசியம் இருப்பதால் இரண்டு மாதங்களுக்கு அவகாசம் வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு மாவட்டங்களிலும் பாட்டில்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் அமல்படுத்துவதில் உள்ள முன்னேற்றம் குறித்து அரசுக்கு பாராட்டும் நீதிமன்றம் சார்பாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் பாட்டில்களை அடையாளம் காண்பதற்கு கியுஆர் கோடு முறையை பயன்படுத்தலாம் எனவும் யோசனை தெரிவிக்கப்பட்டது. மேலும் திரும்ப பெற்ற பாட்டில்களில் விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த வருவாய்க்கான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பெரம்பலூர் மற்றும் கோவை மாவட்டங்களில் காலி பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தொடங்க அவகாசம் வழங்கி வழக்கின் விசாரணை ஏப்ரல் 17ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.