விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமிழக அரசியலின் உச்சபட்ச ‘சந்தர்ப்பவாத அரசியல்வாதி’ என்று நாம் தமிழர் கட்சியின் செய்தித்தொடர்பாளர் பாக்கியராஜன் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கடந்த 2009-ஆம் ஆண்டு ஈழப் போரின் போது காங்கிரஸை ‘வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்துவேன்’ என்று சபதமிட்டுவிட்டு, அடுத்த தேர்தலிலேயே அதே காங்கிரஸுடன் கூட்டணி வைத்தது, ஈழ ஆதரவுப் பேசிவிட்டு ஈழ எதிர்ப்பாளர்களுக்கு விருது வழங்கியது உள்ளிட்ட திருமாவளவனின் பல்வேறு முரண்பாடான அரசியல் நகர்வுகளை அவர் பட்டியலிட்டுள்ளார்.

மேலும், ‘இல்லாத திராவிடத்திற்கு மாற்று தமிழ்த்தேசியம்’ என்று கூறிவிட்டு, பின்னர் ‘தமிழ்த்தேசியம் என்று ஒன்றுமில்லை’ என யூ-டர்ன் அடித்தது மற்றும் விஜயகாந்த் குறித்த முரண்பட்ட பேச்சுக்கள் என திருமாவளவனின் சந்தர்ப்பவாத அரசியலுக்கு ஓராயிரம் உதாரணங்கள் உள்ளதாகச் சாடியுள்ளார்.

அன்று நாம் தமிழர் கட்சி இதைக் குறிப்பிட்ட போது ‘சாதிவெறியர்கள்’ எனப் பட்டம் கட்டிய திமுக மற்றும் திகவினர், இன்று தவெக அமைச்சரவையில் விசிக இணைந்ததை அடுத்து திருமாவளவனைச் சந்தர்ப்பவாதி என வசைபாடுவதைக் குறிப்பிட்டு, ‘வாழ்க்கை ஒரு வட்டம்’ என உபிஸ்களை (உடன்பிறப்புகளை) பாக்கியராஜன் வம்புக்கு இழுத்துள்ளது தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதக் கிளப்பியுள்ளது.

“>