தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை சுண்ணாம்பு கார தெரு ஆற்றங்கரை பகுதியில் செந்தில்(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வசந்தி(38) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர்.

இந்நிலையில் வசந்தி ஆறாவது முறையாக கர்ப்பமானார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரசவ வலி அதிகமானதால் வசந்தி மருத்துவமனைக்கு செல்லாமல் தனக்குத்தானே பிரசவம் பார்க்க முடிவு செய்தார். அதில் வசந்திக்கு ஆறாவதாக ஆண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே ஐந்து குழந்தைகள் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு ஆறாவதாக பிறந்த குழந்தையை கொலை செய்ய வசந்தி முடிவு செய்தார்.

இதனால் குழந்தையின் கழுத்தை துணியால் இறுக்கி கொலை செய்து ஒரு பெயிண்ட் வாளியில் வைத்து மூடி வைத்தார் சிறிது நேரத்தில் ரத்தப்போக்கு அதிகமாக இருந்ததால் வசந்தி மயங்கி விழுந்தார். அவரை குடும்பத்தினர் மீது பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி வசந்தி உயிரிழந்தார்.

இந்நிலையில் வசந்தியின் குடும்பத்தினர் அவரது உடலை யாருக்கும் தெரியாமல் எடுத்து சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வசந்தி மற்றும் அவரது குழந்தையின் உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.