ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் வருகின்ற ஜூன் மாதம் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் நிலையில் பாகிஸ்தான் அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதனால் தன்னுடைய தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து அணியுடன் ஜூன் 6-ம் தேதி பாகிஸ்தான் மோதுகிறது. இந்நிலையில் டி20 உலக கோப்பை போட்டியில் வெற்றி பெறும் பாகிஸ்தான் வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பரிசு தொகையை அறிவித்துள்ளது.

எப்போதும் போட்டி முடிவடைந்த பிறகு பரிசுத்தொகை அறிவிக்கப்படும் நிலையில் தங்களுடைய வீரர்களுக்கு உத்வேகத்தை கொடுப்பதற்காக முன்னதாகவே பரிசு தொகையை அறிவித்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி டி20 உலக கோப்பையில் வெற்றி பெறும் பட்சத்தில் ஒவ்வொரு வீரர்களுக்கும் தலா 100,000 டாலர்கள் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.83 லட்சமாகும். மேலும் அதன்படி போட்டியில் வெற்றி பெற்றால் பாகிஸ்தான் வீரர்கள் தலா ரூ.83 லட்சம் பரிசு தொகையை பெறுவார்கள்.