மதுரையில் வருடந்தோறும் சித்திரை திருவிழாவானது வருடந்தோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த வருடம் சித்திரை திருவிழா முன்னிட்டு வரும் மே 5ஆம் தேதி மதுரைக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார். வருகின்ற 3ஆம் தேதி தங்க பல்லக்கில் ஆலயத்தை விட்டு மதுரைக்கு புறப்படும் கள்ளழகர் மே 5ஆம் தேதி தங்க குதிரையில் வைகை ஆற்றில் எழுந்தருளுவார்.

பின்பு வண்டியூர் பகுதியில் உள்ள தேனூர் மண்டபத்தில் சேஷ வாகனம், கெருட வாகனத்தில் காட்சி தருவார். இந்த திருவிழாவில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இதனை முன்னிட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.இந்நிலையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் 6 நாட்கள் டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மதுரை மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், அரசு முடிவுகளில் நீதிமன்றம் தலையிடாது என்று கூறிவிட்டனர். இருப்பினும் இந்த மனுவை பரிசீலிக்குமாறு ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.