சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி ராஜீவ் காந்தி நகர் 19-வது மேற்கு குறுக்கு தெருவில் ஆரோக்கியராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெனிபர் என்ற மனைவி உள்ளார். இந்தநிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜெனிபர் கோபத்தில் பெரம்பூரில் இருக்கும் தாய் வீட்டிற்கு சென்றார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஆரோக்கியராஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆரோக்கிய ராஜின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஆரோக்கியராஜின் செல்போனை கைப்பற்றினர். அந்த செல்போனில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக ஆரோக்கியராஜ் பேசிய வீடியோ இருந்தது. அந்த வீடியோவில் எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. போலீசார் என் மனைவி வீட்டிலோ, என் வீட்டிலோ, உறவினர்களிடமோ விசாரிக்க வேண்டாம் என பேசியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.