தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படக்குழு தற்போது புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

அதாவது பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஜெயிலர் படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 30 வருடங்களுக்கு முன்பு ஹிந்தியில் வெளியான உத்தர் தக்ஷின் என்ற திரைப்படத்தில் ரஜினி மற்றும் ஜாக்கி ஷெராப் இணைந்து நடித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அவர்கள் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.