தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களுக்கான 117 பேருந்துகள் கொள்முதல் செய்ய டென்டரில் மாற்றுத்திறனாளிகள் அணுகும் விதமாக தாழ்தள  பேருந்துகளையும் கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தாழ்தள பேருந்துகள் எந்தெந்த வழித்தடங்களில் இயக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்பது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி வரதட்சக்கரவர்த்தி அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்த போது சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னை போக்குவரத்து கழகம் சார்பில் 13 கிராம வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த சாலைகள் மிகவும் குறுகலாக இருக்கின்ற காரணத்தினால் பேருந்துகளை இயக்கினால் பேருந்துகள் கடுமையாக பாதிப்படைய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதை போல சென்னையில் சுரங்கப்பாதை வழியாக 173 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும் தற்போது அந்த வழித்தடங்களில் 100% பேருந்துகளை இயக்கினால் மழை காலங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் மெட்ரோ பணிகள் நடைபெற்று வரும் 186 வழிதடங்கள் மற்றும் மினி பேருந்துகள் இயக்கப்படும் 74 வழித்தடங்களிலும் இந்த தாழ்தள  பேருந்துகளை இயக்குவது சாத்தியமில்லை என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் 342 தாழ்தள  பேருந்துகளை வாங்க திட்டமிடப்பட்டிருக்கின்ற நிலையில் அவற்றை தோராயமாக 65 வழித்தடங்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து வருகிற பிப்ரவரி 20-ஆம் தேதிக்கு நீபதிகள் இந்த விசாரணைதியை தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.