சுட்டெரிக்கும் பாலைவன வெயிலுக்கு நடுவே, மனிதாபிமானம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதைக் காட்டும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு தாய் தனது சிறு வயது மகனுடன், அந்த வழியாகக் கடந்து செல்லும் பயணிகளுக்குத் தண்ணீர் கொடுத்துத் தாகம் தீர்த்து வருகிறார்.

மைல் கணக்கில் நிழலோ, தங்குமிடமோ இல்லாத அந்த வறண்ட பாதையில், அவர்களின் இந்தச் சிறிய செயல் பலருக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. ​அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனப் பயணிகள் சிலர், அந்தத் தாயும் மகனும் தண்ணீர் கொடுப்பதைப் பார்த்து வியந்து தங்களது பயணத்தை நிறுத்துகின்றனர்.

அவர்கள் அந்தச் தாயிடம் தண்ணீர் வாங்கி அருந்திய பிறகு, அந்த இளைஞர்களில் ஒருவர் அந்தச் சிறுவனுக்கு அன்பளிப்பாகச் சிறிது பணத்தைக் கொடுக்கிறார். இந்த நெகிழ்ச்சியான காட்சி தற்போது சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கானோரால் பகிரப்பட்டு வருவதுடன், “சுட்டெரிக்கும் வெயிலிலும் அன்பு தான் உண்மையான நிழல்” எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.