நாட்டில் அதிக எண்ணிக்கையிலான பாலியல் பலாத்கார வழக்குகள் வரிசையில் ராஜஸ்தான் மாநிலம் முதலிடத்தில் உள்ளது என்ற தவறான கருத்து காணப்படுகிறது என டி.ஜி.பி உமேஷ் மிஷ்ரா கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, ராஜஸ்தானில் பதிவு செய்யப்படும் பலாத்கார வழக்குகள் 41% பொய்யானவை. பலாத்கார வழக்குகள் எண்ணிக்கையில் மத்திய பிரதேசம் தான் முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் ராஜஸ்தான் இருக்கிறது. அதுவும் தொடர்ச்சியாக விடாமல் வழக்குகளை பதிவு செய்வதனாலேயே இந்த இரண்டாவது இடத்தில் உள்ளது.

மேலும் மத்திய பிரதேசத்தில் குறைவான வழக்குகள் காணப்படுவதற்கான காரணம் அவர்கள் எஃப் ஐ ஆர் பதிவு செய்ய தவறி விடுகின்றனர். அதேபோல் பலாத்காரம் போன்ற தீவிரமான விஷயங்களில் மற்ற மாநிலங்கள் வழக்குகளை பதிவதில்லை. அதற்கு மாறாக புகாராக பெற்று அவர்கள் விசாரணையை தொடங்கி விடுகின்றனர். அது பல முக்கிய சான்றுகளை அழிப்பதற்கான ஆபத்து இருக்கிறது. இந்நிலையில் ராஜஸ்தானில் பலாத்கார வழக்குகளை பதிவு செய்ய கால தாமதம் செய்யக்கூடாது என போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பொய்யான வழக்கு பதிவு செய்யும்போது எஃப் ஐ ஆர் போடப்பட்டு பொய்யான வழக்கு பதிவு செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். முந்தின ஆண்டை விட கடந்த 2022 -ஆம் ஆண்டு ஒப்பிட்டு பார்க்கும்போது பொய் வழக்கு பதிவு செய்பவர்களுக்கு எதிரான நடவடிக்கை 68 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் தேசிய அளவில் நிலுவையில் உள்ள பலாத்கார வழக்குகளின் சராசரி எண்ணிக்கை 30 சதவீதம். ஆனால் ராஜஸ்தானில் 12 சதவீதம் என்ற அளவிலேயே இருக்கிறது. இது போன்ற வழக்குகளில் தண்டனை அளித்ததற்கான தேசிய சராசரி அளவு 28%. ஆனால் ராஜஸ்தானில் 47.9% என டிஜிபி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.