சாலைகளில் தார் கார் வைத்திருப்பவர்கள் ஒருவித அதிகாரத் தோரணையுடன் நடந்து கொள்வதாகப் புகார்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள வீடியோ ஒன்று பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில், மஹிந்திரா தார் கார் உரிமையாளர் ஒருவர் தனது வாகனத்தைப் பின்னோக்கி (Reverse) மிக அதிவேகமாக இயக்கி, அங்கிருந்த இளைஞர் ஒருவரின் பைக் மீது ஏற்றிச் சிதைத்துள்ளார். கண் இமைக்கும் நேரத்தில் அந்த பைக் சுக்குநூறாக நொறுங்கியது. ஓட்டுநரின் இந்தத் திட்டமிட்ட ரவுடித்தனத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த மக்கள், உடனடியாக ஒன்று திரண்டு காரைச் சூழ்ந்து கொண்டனர். ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்தக் காரை அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தியதோடு, கதவைத் திறந்து ஓட்டுநரையும் சரமாரியாகத் தாக்கினர். மக்களின் கோபத்தைக் கண்டு நிலைகுலைந்த அந்த ஓட்டுநர், அங்கிருந்து தலைதெறிக்க ஓடும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிரும் நெட்டிசன்கள், தார் கார் வாங்கியவர்கள் பலரும் அந்தச் சாலையையே தங்களுக்குச் சொந்தமானது என நினைத்துக்கொண்டு அராஜகத்தில் ஈடுபடுவதாகக் கடுமையாகச் சாடி வருகின்றனர். “பெரிய வாகனம் இருந்தால் எவர் மீது வேண்டுமானாலும் ஏற்றலாமா?” என்று கேள்வி எழுப்பியுள்ள அவர்கள், சட்டத்தை மதிக்காமல் மற்றவர்களின் சொத்துக்களுக்கும் உயிர்களுக்கும் சேதம் விளைவிப்பவர்களுக்கு இது போன்ற ‘தர்ம அடி’ தான் சரியான பாடம் எனத் தெரிவித்து வருகின்றனர். ஒரு சில தார் உரிமையாளர்களின் இத்தகைய பொறுப்பற்ற செயல்களால், ஒட்டுமொத்த தார் கார் உரிமையாளர்கள் மீதும் சமூகத்தில் ஒருவித எதிர்மறையான பிம்பம் உருவாகி வருவதாக வாகன ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.