உத்தரகாண்ட் மாநிலம் கோட்வாரில் உள்ள புகழ்பெற்ற சித்தபாலி கோயில் வளாகத்தில், ஜனவரி 2-ம் தேதி காலை பக்தர்களுக்கும் கோயில் தன்னார்வலர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

தரிசனத்திற்காக வரிசையில் செல்வது தொடர்பான தகராறில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், ஒரு நபர் தடியால் மற்றொருவரைத் தாக்குவதும், கூட்ட நெரிசலுக்கு இடையே மக்கள் ஒருவரையொருவர் தள்ளுமுள்ளு செய்வதையும் காண முடிகிறது.

அங்கிருந்த மற்ற பக்தர்கள் அவர்களைச் சமாதானப்படுத்த முயன்ற போதிலும், கோயில் வளாகமே சில நிமிடம் போர்க்களம் போலக் காட்சியளித்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

இதேபோல், உத்தரகாண்டின் பத்ரிநாத் கோயிலிலும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒரு மோதல் சம்பவம் நடைபெற்றது. அங்கு கோயில் படிக்கட்டுகளில் நின்று சமூக வலைதளங்களுக்காகப் புகைப்படம் எடுப்பது தொடர்பாக பக்தர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு, அது பெரிய சண்டையாக மாறியது.

“>

 

புனிதமான கோயில் வளாகத்தில் இது போன்ற வன்முறைச் சம்பவங்கள் நடப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்மீகத் தலங்களுக்கு வரும் மக்கள் அமைதியைக் கடைப்பிடிக்காமல், இது போன்ற சிறு காரணங்களுக்காக வன்முறையில் ஈடுபடுவது வருத்தமளிப்பதாகப் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.