பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா குறித்து சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் புகார்கள் மற்றும் தவறான செய்திகள் குறித்து, மூத்த பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 45 ஆண்டுகளாகத் தனது குழுவில் இருக்கும் ராஜா தனக்கு ஒரு பிள்ளை போன்றவர் என்றும், அவரிடம் எப்போதுமே ஜாதி உணர்வு இருந்ததில்லை என்பதைத் தான் சத்தியம் செய்து கூறுவதாகவும் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். இதுபோன்ற தவறான செய்திகள் பரவுவது தமிழ் வளர்ச்சிக்கே தடையாகிவிடும் என அவர் கவலை தெரிவித்துள்ளார்.
“ராஜாவுக்கு இப்படிப்பட்ட எண்ணங்கள் கிஞ்சித்தும் இருக்காது என்று நான் சத்தியமிட்டுச் சொல்லுவேன். அவரைப்பற்றி இப்படிச் சொல்லுவது உள்ளபடியே வருத்தம்” – சாலமன் பாப்பையா#SolomonPappaiah | #PattimandramRaja pic.twitter.com/F0rsC9Bn5V
— PttvOnlinenews (@PttvNewsX) February 12, 2026
மேலும், ராஜா மீது புகாரளித்த அந்தப் பெண்மணி, இது குறித்து ராஜாவிடமே நேரடியாகப் பேசியிருக்கலாம் என்றும், அதை விடுத்து ஊடகங்களில் பேசுவது சரியல்ல என்றும் சாலமன் பாப்பையா குறிப்பிட்டுள்ளார். ராஜாவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவது வருத்தமளிப்பதாகக் கூறிய அவர், முழு உண்மையை அறியாமல் எதையும் பரப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். குருநாதரான சாலமன் பாப்பையாவே நேரடியாக வந்து ஆதரவு தெரிவித்துள்ளதால், இந்த விவகாரம் தற்போது பட்டிமன்ற வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
