ஈகோவால் பிரிய நினைத்த தம்பதியினர், ஒரு இக்கட்டான சூழலில் பாசத்தால் ஒன்று சேர்ந்து நீதிமன்ற அறைக்குள்ளேயே விவாகரத்து ஆவணங்களைக் கிழித்தெறிந்த நெஞ்சை உருக்கும் சம்பவம் டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் அரங்கேறி இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது.

கடந்த 2020-ஆம் ஆண்டு திருமணமான சௌரவ் மற்றும் சிகா சிங் தம்பதியிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, சிகா கோபத்தில் கணவன் மீது வரதட்சணை கொடுமை வழக்குத் தொடர்ந்து விவாகரத்தும் கோரியிருந்தார். இவர்களின் பிரிவால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சிகாவின் தந்தைக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், விஷயம் தெரிந்த கணவன் சௌரவ் தனது பழைய கோபதாபங்களை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு ஓடிச் சென்றுள்ளார்.

அங்கு போதிய வசதிகள் இல்லாததை உணர்ந்து, தனது சொந்தப் பொறுப்பில் மாமனாரை விடுவித்து குருகிராமில் உள்ள புகழ்பெற்ற மேதாந்தா மருத்துவமனையில் சேர்த்து, ஒரு சொந்த மகனைப் போல இரவு பகலாகக் கூடவே இருந்து அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

சௌரவின் இந்த மாபெரும் குணத்தையும் பாசத்தையும் கண்டு உருகிப்போன மனைவி சிகா, நேற்று டெல்லி நீதிமன்றத்தில் இவர்களது விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்த போது, வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதி முன்னிலையிலேயே விவாகரத்து பத்திரங்களை அப்படியே துண்டு துண்டாகக் கிழித்தெறிந்துவிட்டு, ஓடிச் சென்று தனது கணவனை இறுக்கக் கட்டிப்பிடித்துக் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

நீதிமன்ற அறையையே நெகிழ்ச்சியில் ஆழ்த்திய இவர்களின் இந்த உண்மையான காதல் மற்றும் சமரச வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருவதோடு, “வாழ்க்கையில் ஈகோவை தூக்கிப் போட்டால் எல்லாமே சொர்க்கம் தான்” என்று நெட்டிசன்கள் பலரும் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் அள்ளித் தெளித்து வருகின்றனர்.