நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரணியம் அருகே கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து 290 வகையான பறவைகள் ஆண்டுதோறும் வந்து செல்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு சரணாலயத்திற்கு லட்சக்கணக்கான பறவைகள் வந்து குவிந்துள்ளது. கடந்த மாதம் 28,29 ஆகிய தேதிகளில் அந்த பறவைகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. அதில் சுமார் ஒரு லட்சம் நீர்ப்பறவைகள் இருந்ததாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. மேலும் தமிழகத்தில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பில் 147 வகையான பறவை இனங்கள் வந்து சென்றதாகவும் கோடியக்கரைக்கு 96 வகையான பறவைகள் வந்து சென்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் நில பறவைகள் கணக்கெடுப்பு பணி அடுத்த மாதம் 4 மற்றும் 5-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சுரேஷ், கோடியக்கரை வனசரகர், நாகைவன உயிரை காப்பாளர் யோகேஷ் குமார் மீனா மற்றும் வனத்துறையினர் பத்து குழுக்களாக பிரிந்து மாதிரி கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். அதேபோல் கோடியக்கரை வனப்பகுதியில் காலவாய்கரை, சித்தர் கட்டம் மற்றும் கோடியக்கரை, சோழர்கால கலங்கரை விளக்கம், கோடிய காட்டை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் நில பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.

இந்த கணக்கெடுப்பில் புள்ளிக்குயில், மீன் கொத்தி, கௌதாரி, மரங்கொத்தி, செண்பகம், கருங்குயில், மணிப்புறா, வக்கா உள்ளிட்ட 71 வகையான பறவை இனங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் இந்த மாதிரி கணக்கெடுப்பில் 2,700 பறவைகள் தற்போது உள்ளது என்பது தெரியவந்துள்ளது. இந்த வருடம் பறவைகளுக்கு ஏற்ற சூழ்நிலை மற்றும் போதுமான மழையும் இருப்பதால் நீர் பறவைகள் லட்சக்கணக்கில் வந்திருக்கிறது. வருகிற மார்ச் 4,5 ஆகிய தேதிகளில் நடைபெறும் கணக்கெடுப்பு பணி நடைபெறும். அதன் பின்பு கணக்கெடுப்பில் இந்த ஆண்டு பறவைகள் வரத்து குறித்த தெரியவரும் என வனத்துறை அலுவலர் அயுப்கான் கூறியுள்ளார்.