உலகம் முழுவதும் உள்ள முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வரும் நிலையில், சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்குக் கோடிக்கணக்கில் போனஸ் வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் மிரள வைத்துள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், நிறுவனத்தின் ஊழியர்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றனர். அவர்களுக்கு போனஸ் தொகையாகக் கட்டுக்கட்டாகப் பண நோட்டுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு ஊழியரும் தனது இரு கைகளிலும் பணத்தை அள்ளிக் கொள்கின்றனர்.

பணம் மிக அதிகமாக இருப்பதால், பல ஊழியர்களால் அதைச் சரியாகச் சுமக்க முடியாமல் கீழே தவறவிடுகின்றனர். கீழே விழும் பணக்கட்டுகளை நிறுவன அதிகாரிகள் எடுத்து மீண்டும் ஊழியர்களின் கைகளிலேயே வைக்கும் காட்சிகள் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

இந்த வீடியோ சீனாவிலுள்ள ஹெனான் (Henan) மாகாணத்தைச் சேர்ந்த ஒரு கிரேன் (Crane) தயாரிக்கும் நிறுவனம் எனத் தெரியவந்துள்ளது. அந்த நிறுவனம் தனது விற்பனைப் பிரிவில் (Sales Managers) சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கு சுமார் 5 மில்லியன் யுவான் (இந்திய மதிப்பில் பல கோடி ரூபாய்) வரை போனஸ் வழங்கியுள்ளது.

வழக்கமாக வங்கி கணக்கில் பணத்தைப் பரிமாற்றம் செய்யாமல், ஊழியர்களைக் குஷிப்படுத்த நேரடியாகப் பணமாகவே வழங்கியதுதான் இந்தச் செய்தியின் ஹைலைட்.

இந்த வீடியோவை இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். வீடியோவைப் பார்த்த பயனர்கள் பலரும், “இதுதான் எனது கனவு நிறுவனம்” எனப் பதிவிட்டு வருகின்றனர்.

“இவ்வளவு பணத்தை நேரில் பார்ப்பது ஒரு கனவு போல இருக்கிறது” என ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். நேரடியாக வங்கி கணக்கில் போடாமல் இப்படி விளம்பரத்திற்காகச் செய்கிறார்களோ?” எனச் சில விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இருப்பினும், ஊழியர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் விதமாக அந்த நிறுவனம் காட்டியுள்ள இந்த தாராள மனப்பான்மை இணையத்தில் அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.