கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் இலக்கல் நகர் பகுதியில் பசவராஜ் பஜந்திரி மற்றும் நீலம்மா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிறந்த ஆண் குழந்தை சுவாச நோயால் அவதிப்பட்ட வந்த நிலையில் இதய நோய் உள்ளிட்ட பல உறுப்புகளும் செயலிழந்துள்ளது. இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பாகல் கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையை பெற்றோர்கள் அனுமதித்த நிலையில் அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டும் உடல்நிலை மோசமாகியது. இதனால் குழந்தை உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று கூறி மருத்துவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தையை பெற்றோர்கள் வீட்டுக்கு கொண்டு வந்ததும் குழந்தை மயக்கம் அடைந்தவுடன் சுயநினைவை இழந்தது. இதனால் குழந்தை உயிரிழந்ததாக நினைத்த பெற்றோர் இறந்த செய்தியை உறவினர்களுக்கு தெரிவித்துவிட்டு இறுதி சடங்கு செய்வதற்கான வேலையை தொடங்கினர். ஆனால் அப்போது திடீரென்று குழந்தை இருமியதால் வீட்டிற்கு வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனைக் கண்டு பெற்றோர் ஆனந்த கண்ணீர் விட்டனர். பிறகு தர்காவுக்கு குழந்தையை தூக்கிச் சென்று பிரார்த்தனை செய்தவுடன் தனியார் மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தனர். தற்போது குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.