சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி மைசூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (Vande Bharat Express) ரயிலில் பயணித்த அஜய் குமார் என்ற பயணிக்கு, சக பயணிகளின் குழந்தைகளால் ஏற்பட்ட அக்மார்க் மோசமான அனுபவம் தற்போது சோசியல் மீடியாவில் மாபெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

ஜன்னல் ஓரம் அமர்ந்து பயணித்த அஜய்யின் பக்கத்து சீட்டில் இருந்த 3-4 வயது குழந்தை, பயணம் முழுவதும் அவரை எட்டி உதைத்தும், அவர் மீது விழுந்தும் டார்ச்சர் செய்ததோடு, ஒரு கட்டத்தில் அவர் குடித்துக் கொண்டிருந்த டீயைக் கொட்டும் நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது; ஆனால், அந்தக் குழந்தையின் தந்தை இதைப் பார்த்தும் அக்மார்க் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

அதுமட்டுமில்லாமல், அவருக்கு முன்னால் இருந்த சீட்டில் அமர்ந்திருந்த மற்றொரு குழந்தை, சீட்டை கேம் விளையாடுவது போலப் பின்னோக்கித் தள்ளி விளையாடியதால், அஜய்யின் மடியில் இருந்த லேப்டாப் (Laptop) மூடும் நிலைக்கு வந்ததோடு அவரது முழங்காலிலும் பலத்த அடி விழுந்துள்ளது; இதையும் அந்தக் குழந்தையின் தாய் கண்டுகொள்ளவே இல்லை.

குழந்தைகள் ரயிலில் என்ஜாய் செய்வதில் தமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறிய அஜய், சக பயணிகளுக்குத் தொந்தரவு கொடுக்கும் போது பெற்றோர் கண்டிப்பது தான் பொது இடங்களுக்கான அடிப்படை ஒழுக்கம் (Civic Sense) என்று ஆதங்கத்துடன் எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த விவகாரம், தற்பொழுது சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி, “இன்றைய பெற்றோர்கள் பலருக்குப் பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை அறிவே இல்லை” என்றும், “கேள்வி கேட்டால் சண்டைக்கு வருகிறார்கள்” என்றும் நெட்டிசன்கள் வளைத்து வளைத்துக் கமெண்டுகளை அள்ளித் தெளித்து வருவதால் செம வைரலாகி வருகிறது.