தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை விமர்சித்து அதிமுகவின் ஐடி விங் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுகள் இப்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் அனலைக் கிளப்பியுள்ளன. குறிப்பாக, கரூரில் உயிரிழப்பு ஏற்பட்டபோது பாதிக்கப்பட்டவர்களின் வீட்டிற்குச் சென்று ஆறுதல் கூறாமல், அவர்களைத் தனது பனையூர் வீட்டிற்கே வரவழைத்ததைச் சுட்டிக்காட்டி, இது ஒரு “வேற லெவல் பண்ணையார்தனம்” என்று அதிமுகவினர் கடுமையாகச் சாடியுள்ளனர்.

நேரில் சென்று மக்களின் கண்ணீரைத் துடைக்க மனமில்லாமல், ‘கிளசரின்’ கண்ணீரோடு புகைப்படங்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, அந்தத் துயரமான சூழலையும் தனக்கான சுய விளம்பரத்திற்காக (Self Promotion) விஜய் பயன்படுத்திக் கொண்டதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ​பாதிக்கப்பட்ட மக்களைத் தன்னைத் தேடி வரவழைத்து ஆறுதல் பெற வைத்தது ஒரு ஆபத்தான அரசியல் அடையாளம் என்றும், இதற்காக விஜய்க்கு ‘டாக்டர்’ பட்டமே கொடுக்கலாம் என்றும் அதிமுகவினர் எள்ளி நகையாடியுள்ளனர்.

மக்கள் துயரத்தில் இருந்தபோது குற்ற உணர்வே இல்லாமல் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்ட அந்தச் செயல்பாடு, ஒரு தலைவனுக்கு அழகல்ல என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர். அதிமுக – தவெக இடையே முற்றியுள்ள இந்த வார்த்தைப் போர், குறிப்பாக விஜய்யின் கடந்த காலச் செயல்பாடுகளை முன்வைத்து அதிமுகவினர் எழுப்பியுள்ள இந்தக் கேள்விகள், சமூக வலைதளங்களில் ஒரு பெரிய விவாதத்தையே உருவாக்கியுள்ளன.