திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின்  தலைமை பீடமாகவும் சர்வ தோஷ பரிகார தளமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலின் புகழ் பெற்ற ஆழிதேரோட்டம் ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரத் திருவிழாவின் போது நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடத்திற்கான தேரோட்ட விழாவிற்கான பந்தல்கால் முகூர்த்தம் தைப்பூச நாளில் நடைபெற்றது. இதற்கான கொடியேற்றம் வருகிற மார்ச் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ளது. வருகிற ஏப்ரல் ஒன்றாம் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆழி தேரோட்டம் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் ஆழிதேருக்கான  கண்ணாடி கூண்டு பிரிக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பாக தொடங்கியுள்ளது. இதனையடுத்து கிரேன் உதவியுடன் நேற்று ஆழித்தேரின் கட்டுமான பணிகள் முமரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்போது இரும்பு தூண்களை அப்புறப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது திருவாரூர் கீழ வீதி வழியாக கனரக வாகனங்கள் செல்வதற்கு அனுமதி இல்லை. அதற்கு பதிலாக மேலவீதி, வடக்கு வீதி, தெற்கு வீதி வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து மாற்றம் குறித்து தெரிந்து கொள்ளும் விதமாக திருவாரூர் நகர போலீஸ் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.