கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி தாலுகா வேலம்பட்டி எம்ஜிஆர் நகரில் ராணுவ வீரர் பிரபாகரன் (31) என்பவர் வசித்து வருகிறார். இவரது சகோதரர் பிரபு (28). இவர்கள் இரண்டு பேரும் ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இதே கிராமத்தை சேர்ந்த நாகரசம்பட்டி பேரூராட்சி ஒன்றாவது வார்டு திமுக கவுன்சிலர் சின்னசாமி (58). கடந்த எட்டாம் தேதி பிரபாகரன் பொது குடிநீர் தொட்டி அருகே துணிகளை துவைத்ததால் இவர்களிடையே  தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த பிரபாகரனின் தாயாருக்கும், சின்னசாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதன்பின் மீண்டும் அன்றைய தினம் மாலை சின்னசாமி மற்றும் அவரது மகன்கள் சிலர் பிரபாகரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சின்னசாமி தரப்பினர் தாங்கள் வைத்திருந்த கத்தி, இரும்பு கம்பி மற்றும் உருட்டுக் கட்டையால் பிரபாகரன், அவரது தம்பி பிரபு மற்றும் தாய் ஆகியோரை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த மூன்று பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது குறித்து பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ஒன்பது பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

ஆனால் சின்னசாமி படுகாயம் அடைந்திருந்தால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதேபோல் சின்னசாமி கொடுத்த புகாரின் பேரில் ராணுவ வீரர்கள் பிரபாகரன், பிரபு மற்றும் 18 வயது மாணவர், முத்து, மாதையன் ஆகிய ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ராணுவ வீரர் பிரபு நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனை கொலை வழக்காக மாற்றிய போலீசார்  தலைமறைவாக இருந்து தி.மு.க கவுன்சிலர் சின்ன சின்னசாமி, காளியப்பன்  உட்பட இரண்டு பேரை இன்று கைது செய்துள்ளனர்.