நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பழையபாளையம் மாரியம்மன் கோவில் தெருவில் ஆதிமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அங்காளம்மன் கோவிலில் பூசாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 28-ஆம் தேதி இரவு நேரத்தில் ஆதிமூர்த்தி சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ பற்றி எரிந்தது. இதில் ஆதிமூர்த்தி அவரது மனைவி அமராவதி, மகன், மகள் ஆகியோர் தீக்காயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் 4 பேரையும் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ஆதிமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.