நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு எட்டிமடை பகுதியில் கட்டிட மேஸ்திரியான செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகாமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு பிரகாஷ் என்ற மகனும், கீர்த்தனா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் பிரகாஷ் கோவையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கீர்த்தனா திருமணமாகி தனது கணவருடன் வசித்து வருகிறார். நேற்று காலை கீர்த்தனா தனது தாயை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார்.

ஆனால் சிவகாமி அழைப்பை ஏற்காததால் தனது தந்தைக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து வீட்டிற்கு சென்ற செல்வம் தனது மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் தனது மனைவியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் சிவகாமி ஏற்கனவே உயிரிழந்த விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சிவகாமியின் செல்போனில் 9 நிமிடம் பேசும் வீடியோ பதிவு இருப்பதை பார்த்தனர்.

அந்த வீடியோவில் சிவகாமி அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணிடம் நகையை வைத்து பணம் வாங்கியுள்ளார். பெரும்பகுதி பணத்தை சிவகாமி திருப்பி கொடுத்ததாகவும், தற்போது மீதி பணத்தை கேட்டு அந்த பெண் தொந்தரவு செய்வதாகவும் கூறியுள்ளார். தனது மகனிடம் தந்தையை நன்றாக பார்த்து கொள்ளுமாறும் வீடியோவில் சிவகாமி கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் சிவகாமி வீடியோவில் கூறிய பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொந்தரவால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.