கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லமாவடி பகுதியில் ராகவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகுமார் என்ற மகன் உள்ளார். இவர் சென்னையில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுகுமார் கொல்லமாவடி மாசான சாமி கோவில் அருகே தனக்கு சொந்தமாக இருக்கும் நிலத்தில் பாதைக்காக இடத்தை சமன்படுத்த அதிக இடத்தை எடுத்ததாக தெரிகிறது. அங்கு காம்பவுண்ட் சுவர் கட்டிய பிறகு அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் சங்கர், நாகலிங்கம், சுயம்புலிங்கம், ஸ்ரீதரன் ஆகிய நான்கு பேரும் சுகுமாரிடம் தகராறு செய்தனர்.

அப்போது இரு தரப்பினரும் நில அளவையரை வைத்து சம்பந்தப்பட்ட நிலத்தை அளந்து பிரச்சனையை தீர்த்துக் கொள்ளலாம் என பேசி முடிவு செய்தனர். தண்ணீர் ஊற்றி நனைப்பதற்காக சுகுமார் சென்றபோது நாகலிங்கம் உள்ளிட்ட நான்கு பேரும் கடப்பாரை மற்றும் மண்வெட்டியால் காம்பவுண்ட் சுவரை இடித்தனர். இதனை தட்டி கேட்ட சுகுமாரை நான்கு பேரும் தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து சுகுமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் கார்த்திக் சங்கர் உள்பட நான்கு பேர் மீதும் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.