தமிழகத்தில் காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொது இடங்களில் கூடும் மக்கள் நோய் தடுப்பு விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இன்று காணும் பொங்கலை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு சுற்றுலா தளங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னையை பொருத்தவரை கடற்கரைகள், உயிரியல் பூங்காக்கள், மாமல்லபுரம் மற்றும் கேளிக்கை பூங்காக்களில் மாவட்ட நிர்வாகங்கள் முன்னேற்பாடுகளை செய்துள்ளன. தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்தாலும் பருவ கால தொற்றுகளின் தாக்கம் தீவிரமாக இருந்து வருவதால் சில அறிவுறுத்தல்களை பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் விடுத்துள்ளனர்.

அதன்படி காணும் பொங்கல் தினத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களில் மருத்துவ வசதிகள் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் முக்கிய இடங்களில் தயார் நிலையில் உள்ளன. காய்ச்சல், சளி,வயிற்றுப்போக்கு மாத்திரைகள் மற்றும் சர்க்கரை உப்பு கரைசல் உள்ளிட்டவை மருத்துவ முகாம்களில் கிடைக்கும். அதேசமயம் மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து காணும் பொங்கலை கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.