கர்நாடகா சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அவருடைய குடும்பத்தினரை கொலை செய்ய திட்டமிட்டது குறித்து சமூகவலைத்தளங்களில் ஒரு ஆடியோவானது வைரலாகி வருகிறது. அந்த ஆடியோ பற்றி கர்நாடகா காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, பா.ஜனதா மீது குற்றம்சாட்டி இருக்கிறார்.

மேலும் இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கூறி உள்ளார். இதனிடையில் ஆடியோ விவகாரம் பற்றி பா.ஜனதா வேட்பாளர் மணிகண்ட ரத்தோடு கூறியதாவது “எனக்கும் அந்த ஆடியோவுக்கும் சம்பந்தம் இல்லை. அது முற்றிலும் பொய் என அவர் கூறினார்.

இந்த நிலையில் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி அளித்தபோது “மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ பற்றி எனக்கு தெரியாது. எனினும் அதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும். இவ்விவகாரத்தை தீவிரமாக எடுத்து கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று கூறினார்.