தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரி கௌரவ பேராசிரியர்களுக்கு கூடுதலாக ஐந்தாயிரம் ரூபாய் ஊதியம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் இன்று துணைவேந்தர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பல்கலைக்கழக விதிகளை மாற்றி ஒரே மாதிரியான ஊதியம் மற்றும் தகுதி ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

மேலும் அனைத்து கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான பொது பாடத்திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கௌரவ விரிவுரையாளர்களின் மாத ஊதியம் 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.