
சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையான்குடி அருகே பள்ளிக்குச் சென்ற சோபிதா மற்றும் கிஷ்மிதா ஆகிய சிறுமிகள் கண்மாயில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்குவதாக அறிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பாஜக கட்சியின் மூத்த தலைவர் எச் ராஜா பேசியதாவது, ஆழிமதுரை அரசு பள்ளியில் கழிவறைகள் இருந்தும் மாணவிகளை அங்கு செல்ல விடாமல் ஆசிரியர்கள் தடுப்பதாக ஏற்கனவே புகார் வந்துள்ளது. அதோடு ஆசிரியர்களே மாணவிகளின் கையில் கப்பை கொடுத்து கண்மாய்க்கு செல்லுமாறு கூறியுள்ளனர். இதனால் இரண்டு சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏற்கனவே 4-க்கும் மேற்பட்ட சிறுமிகள் சிவகங்கை மாவட்டத்தில் உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக மின்சாரம் தாக்கி மாணவன் ஒருவன் வகுப்பறையில் உயிரிழந்தான். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பவர்களுக்கு அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும் நிலையில் பள்ளிகளில் உயிரிழக்கும் சிறுவர் சிறுமிகளுக்கு மட்டும் 3 லட்சம் ரூபாய் தான் நிவாரணம் வழங்குகிறது. எனவே பள்ளிகளில் உயிரிழக்கும் மாணவர்களின் குடும்பத்தினருக்கும் 10 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்குவதோடு அவர்களின் பெற்றோர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு வேலையும் வழங்க வேண்டும். இந்த சம்பவத்திற்கு காரணமான ஆசிரியர்கள் மீது வெறும் கண்துடைப்புக்காக சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் அவர்கள் மீது நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.