மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், விவசாய நிலம் விற்பனை தொடர்பான தகராறில், 45 வயது மகன் தனது 70 வயது தாயை கொலை செய்து, பின்னர் தற்கொலை செய்த கொண்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ரேணாபூர் தாலுக்காவின் சாங்க்வி கிராமத்தில் நடந்தது. உயிரிழந்தவர்கள் லட்சுமிபாய் குஹே (70) மற்றும் அவரது மகன் பபன் குஹே (45) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி, குடும்பத்தினருக்குள் விவசாய நிலம் விற்பனை குறித்து சில காலமாக சண்டை சச்சரவு நிலவி வந்தது. பபன், நிலத்தை விற்று பணம் திரட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். ஆனால், லட்சுமிபாய் அதை தொடர்ந்து மறுத்துவந்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சில நாட்களுக்கு முன்பு, கோபத்தின் உச்சத்தில் பபன் தனது தாயை கயிற்றால் கழுத்து நெரித்து கொலை செய்து, அருகிலுள்ள கரும்புத் தோட்டத்தில் புதைத்துவிட்டார்.
லட்சுமிபாய் திடீரென காணாமல் போனதை கவனித்த கிராம மக்கள், தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில், கரும்புத் தோட்டத்தில் புதிதாக தோண்டப்பட்ட மண்ணைக் கண்டனர். சந்தேகத்துடன் தோண்டியபோது, லட்சுமிபாயின் உடல் மீட்கப்பட்டது. இதனால் கிராமம் முழுவதும் துயரம் மற்றும் அதிர்ச்சி நிலவியது. சம்பவத்துக்குப் சில மணி நேரங்களுக்குப் பிறகு, பபன் தன் வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தகவல் கிடைத்தவுடன் ரேணாபூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பினர். பின்னர், தாய்-மகன் இருவரின் உடல்களும் ஒரே சுடுகாட்டில் எரியூட்டப்பட்டன. இந்த சம்பவம் கிராம மக்களிடையே “ஒரு தாயும் மகனும் இடையிலான புனித பிணைப்பை சிதைத்த கருப்பு நாள்” என கூறுகின்றனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
