ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் அவரது மனைவி கண்கலங்கி அழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கடந்த 2003-ம் ஆண்டைப் போலவே ஆஸ்திரேலிய அணி இந்தியாவின் சாம்பியன் கனவை முறியடித்தது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் பந்துவீச முடிவு செய்தார். முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவரில் 240 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி சார்பில் கேஎல் ராகுல் 66 ரன்களும், விராட் கோலி 54 ரன்களும் எடுத்தனர். இது தவிர கேப்டன் ரோகித் சர்மா 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது தவிர, ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் பாட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 241 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் ஆடிய  ஆஸ்திரேலியா அணி 43 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. டிராவிஸ் ஹெட் 137 ரன்கள் குவித்து மேட்ச் வின்னிங்ஸ் ஆடினார். மேலும் அவருக்கு உறுதுணையாக லபுஷேன் ஆட்டமிழக்காமல் 58 ரன்கள் எடுத்தார். அதேபோல மிட்செல் மார்ஷ் 15 ரன்களும், டேவிட் வார்னர் 7 ரன்கள் எடுத்தனர், ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்கள் எடுத்தார். கிளென் மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 2 ரன்கள் எடுத்தார்.

இந்த போட்டியில் வெற்றி பெற்று 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் என எதிர்பார்த்த இந்திய ரசிகர்கள் இதயம் நொறுங்கி காணப்பட்ட நிலையில், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, சிராஜ் உள்ளிட்ட சக வீரர்கள் கண்கலங்கி சோகத்துடன் காணப்பட்டனர்.. அதே போல பெவிலியனில் இருந்த ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகாவும் கண்கலங்கி அழுகையை அடக்க முடியாமல் நின்று கொண்டிருந்தார். மேலும் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவும் சோகத்துடன் காணப்பட்டார். ரோஹித்தும், அவரது மனைவி ரித்திகா சஜ்தே வும் கண்கலங்கி அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரையும் அழ வைக்கிறது.