உலகம் முழுவதும் டிசம்பர் 25-ஆம் தேதி பெரும் வெள்ளம் ஏற்பட்டு உலகம் அழியும் எனப் போலி தீர்க்கதரிசனம் கூறி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்திய எவன்ஸ் எஷுன் (எபோ நோவா) என்ற நபரை கானா நாட்டு போலீசார் கைது செய்தனர்.

தன்னை ஒரு தீர்க்கதரிசி என அறிவித்துக் கொண்ட இவர், வெள்ளத்திலிருந்து தப்பிக்க நவீன கால ‘நோவாவின் பேழை’ போன்ற 10 மரப்படகுகளைக் கட்டியதோடு, சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகப் பீதி கிளப்பும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இவரது பேச்சை நம்பி அண்டை நாடுகளிலிருந்தும் ஏராளமான மக்கள் தங்களின் உடைமைகளுடன் அவரது இருப்பிடத்திற்குத் திரண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பாதுகாப்புச் சிக்கல்களையும் ஏற்படுத்தியது.

“>

இந்நிலையில், அவர் குறிப்பிட்டபடி டிசம்பர் 25-ஆம் தேதி வெள்ளம் ஏற்படாத நிலையில், தனது பிரார்த்தனையால் கடவுள் அந்த அழிவைத் தள்ளி வைத்திருப்பதாகக் கூறி ஒரு இசை நிகழ்ச்சியில் தோன்றி மக்களைக் கொண்டாடுமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

“>

இவரின் முன்னுக்குப் பின் முரணான பேச்சுகளும், மத நம்பிக்கையைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றியதும் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கானா போலீசாரின் சிறப்பு சைபர் குழு அவரை புதன்கிழமை (டிச.31) அதிரடியாகக் கைது செய்தது. போலி தீர்க்கதரிசனங்கள் மூலம் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கானா அரசு எச்சரித்துள்ளது.