மனிதன் நிலவை எட்டிப்பிடித்து விட்டாலும், பூமியில் உள்ள மகா சமுத்திரங்களின் 95 சதவீத மர்மங்கள் இன்னும் விலகாமலேயே உள்ளன. இந்நிலையில், ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலையில் சிக்கிய விசித்திரமான உயிரினங்கள் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளன.
வழக்கம்போல் கடலுக்குச் சென்ற மீனவர்கள், ஆழ்கடலில் வலை வீசியுள்ளனர். வலையை வெளியே இழுத்தபோது, அதன் கனத்தைக் கண்டு பெரிய மீன்கள் சிக்கியிருக்கும் என மகிழ்ந்தனர். ஆனால், படகின் தளத்தில் கொட்டப்பட்ட உயிரினங்களைக் கண்டு அவர்கள் திகைத்து நின்றனர். அதில் சுமார் 10 அடி நீளம் கொண்ட, வெள்ளி நிறத்தில் மின்னும் ‘ஓர்ஃபிஷ்’ (Oarfish) எனப்படும் அபூர்வ மீன் சிக்கியிருந்தது.
சூரிய ஒளி கூட நுழைய முடியாத ‘ட்விலைட் ஜோன்’ (Twilight Zone) எனப்படும் ஆழ்கடல் பகுதியில் வாழும் இந்த ஓர்ஃபிஷ், பொதுவாகக் கடல் மட்டத்திற்கு வருவதில்லை. நாட்டுப்புறக் கதைகளில் இது ‘கடல் பாம்பு’ என்று அழைக்கப்படுகிறது. ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகளில், இந்த மீன் கரைக்கு வருவது நிலநடுக்கம் அல்லது சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்களின் முன்அறிகுறி எனக் கருதப்படுகிறது. எனினும், இதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
View this post on Instagram
ஓர்ஃபிஷ் தவிர, வலையில் பல விசித்திர உயிரினங்களும் சிக்கியிருந்தன. சால்ப்ஸ் (Salps): சங்கிலித் தொடர் போலவும், கண்ணாடி போன்ற வெளிப்படையான உடலையும் கொண்ட ஜெல்லி போன்ற உயிரினங்கள். ட்ரம்பெட் ஃபிஷ்: நீண்ட மூக்கைக் கொண்ட சிவப்பு நிற மெல்லிய மீன்கள். பஃபர் ஃபிஷ்: எதிரிகளிடம் இருந்து தப்பிக்கத் தன்னைத் தானே பந்து போல ஊதிக்கொள்ளும் விசித்திர மீன். நட்சத்திர மீன்கள்: ஊதா, ஆரஞ்சு நிறங்களில் மின்னிய நட்சத்திர மீன்கள் மற்றும் சங்குகளுக்குள் ஒளிந்து வாழும் துறவி நண்டுகள் (Hermit Crabs).
மேலும், ‘சார்சம்’ (Sargassum) எனப்படும் கடல் பாசிகளும் அதிகளவில் சிக்கியிருந்தன. இவை கடலில் வாழும் சிறிய மீன்களுக்குப் புகலிடமாக விளங்கும் ஒரு சிறிய சுற்றுச்சூழல் மண்டலமாகக் கருதப்படுகிறது. ஆழ்கடலின் ஒரு சிறு பகுதியை மட்டுமே நாம் அறிந்துள்ள நிலையில், இதுபோன்ற அபூர்வ உயிரினங்கள் பிடிபடுவது கடல்சார் ஆராய்ச்சியாளர்களுக்குப் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
