கடலில் தவறி விழுந்து காணாமல் போன ஜலாலுதீன் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் சென்று கடலில் தவறி விழுந்து காணாமல் போனவரின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி வழங்கப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 14.01.2024 அன்று IND-TN-15-MM-4636 என்ற பதிவெண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றவர்களில் விசைப்படைகில் சமையல் பணிக்காக சென்ற கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டம், தேங்காய்ப்பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த திரு A.ஜலாலுதீன் (வயது 38) த/பெ.அபுபக்கர் என்பவர் கடந்த 21.01.2024 அன்று காலை 5:30 மணி அளவில் கன்னியாகுமரி கடலில் இருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் விசைப்படகில் இருந்து கடலுக்குள் தவறி விழுந்துள்ளார்.

அவரை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், இதுவரை கண்டுபிடிக்க இயலாமல் காணாமல் போயுள்ளார் என்ற துயரமான செய்தியை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். கடலில் தவறி விழுந்து காணாமல் போயுள்ள திரு A. ஜலாலுதீன் என்பவரது குடும்பத்திற்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்வதோடு அவரது குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்”என தெரிவித்துள்ளார்.