சென்னை மாவட்டத்தில் உள்ள காட்டுப்பாக்கம் பகுதியில் இருக்கும் கோவிலில் திருவிழா நடைபெற்றது. அப்போது கஞ்சா போதையில் சுற்றித்திரிந்த சில வாலிபர்கள் பொதுமக்களை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார் அந்த பகுதிக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அதே சமயம் கஞ்சா போதையில் இருந்த மூன்று வாலிபர்கள் கையில் கத்தியுடன் ஒரு போலீஸ்காரரை மட்டும் விரட்டியுள்ளனர். இது தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனை தொடர்ந்து பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கத்தியை காட்டி மிரட்டி அட்டகாசம் செய்த சந்தோஷ், சூர்யா, சபரி, இரண்டு சிறுவர்கள் உள்பட ஐந்து பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.