சென்னை புழல் அடுத்த ஆசிரியர் காலனி ஆறாவது தெருவில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டெல்லியில் உள்ள மத்திய அரசு அமைச்சகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் தனது குடும்பத்துடன் நாவலூரில் உள்ள உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்காக தனது வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து நிகழ்ச்சிகள்  முடிந்து நேற்று வீடு திரும்பிய போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அப்போது பீரோவில் இருந்த 5 கிலோ வெள்ளி பொருட்கள், 75 சவரன் தங்க நகைகள் மற்றும் 2 லட்சம் ரூபாய் போன்றவை திருடு போனது தெரியவந்துள்ளது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதன் பின்  கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.