செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஜீவானந்தம் என்பவர் வசித்து வருகிறார். மாற்றுத்திறனாளியாக ஜீவானந்தம் நேற்று முன்தினம் சிகிச்சை பெறுவதற்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சென்று விட்டு பூங்கா ரயில் நிலையத்திலிருந்து மின்சார ரயிலில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் தாம்பரம் சானட்டோரியம் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது அந்த பெட்டியில் இருந்த நான்கு மர்ம நபர்கள் ஜீவானந்தத்திடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர்.

அதற்கு ஜீவானந்தம் பணம் இல்லை எனக் கூறினார். உடனே கூகுள் பே மூலம் அவர்கள் 1,400 ரூபாயை பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து தாம்பரம் ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் மெதுவாக சென்றபோது நான்கு பேரும் கீழே குதித்து தப்பித்து சென்றனர். இதுகுறித்து ஜீவானந்தம் தாம்பரம் ரயில்வே போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பெயரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.