சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பேத்கார் வெங்கடேஸ்வரா நகரில் காமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ டிரைவரான காமேஷ் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் சவாரி முடித்துவிட்டு ஆட்டோவில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் அம்பத்தூர் ஒரகடம் ஐயப்பன் தெரு சந்திப்பு அருகே சென்ற போது அதே பகுதியில் வசிக்கும் கௌதம் என்பவர் நண்பர்களுடன் சேர்ந்து சாலையோரம் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். அப்போது காமேஷ் ஆட்டோவுக்கு வழி விடுமாறு தெரிவித்தார். இதனால் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், காமேஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் காமேஷுக்கு ஆதரவாக அவரது உறவினர் சதீஷ் வந்தார். இதனால் கோபமடைந்த கௌதமமும் அவரது நண்பர்களும் இணைந்து காமேஷ் மற்றும் சதீஷை கத்தியால் வெட்டினர். இதில் படுகாயமடைந்த காமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காமேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் படுகாயமடைந்த சதீஷை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.