பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, தான் ரெட் ஒயின் பானத்துடன் ஸ்ப்ரைட் கலந்து குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளதாக அண்மையில் வெளிப்படுத்தினார். மெஸ்ஸியின் இந்த எளிய “ஒயின்-ஸ்ப்ரைட்” கலவை குறித்த செய்தி சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவியது.

இதன் விளைவாக, ஸ்ப்ரைட் பானத்தின் தாய் நிறுவனமான கோகோ கோலாவின் பங்குகள் பங்குச்சந்தையில் பெரும் எழுச்சியைக் கண்டன. மெஸ்ஸியின் இந்த ஒரு சிறிய தகவல் வெளியான மூன்றே நாட்களில், கோகோ கோலா நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 13 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 1.08 லட்சம் கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.

மெஸ்ஸியின் அபரிமிதமான உலகளாவிய செல்வாக்கு, ஒரு சாதாரண பானத்தைக் கூட உலகத்தரம் வாய்ந்த விளம்பரமாக மாற்றியுள்ளது. ஒயினில் கார்பனேற்றப்பட்ட குளிர்பானத்தைக் கலந்து குடிப்பதன் மூலம் மதுவின் தாக்கம் விரைவாக உடலில் சேரும் என்ற மெஸ்ஸியின் கருத்து, ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

இந்நிலையில் இதற்கு முன்னதாக கிறிஸ்டியானோ ரொனால்டோ கோகோ கோலா பாட்டில்களை அப்புறப்படுத்தி தண்ணீர் குடிக்கச் சொன்னதால் அந்த நிறுவனத்திற்கு இழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது மெஸ்ஸியின் இந்த ‘சீக்ரெட் ட்ரிங்க்’ வெளிப்பாடு, கோகோ கோலா நிறுவனத்திற்கு எதிர்பாராத ஜாக்பாட் ஆக அமைந்துள்ளது.