இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, மும்பை விமான நிலையத்தில் தனது பாதுகாவலரை ஒரு பக்கமாக தள்ளிவிட்டு, முதியவர் ஒருவருக்கு வழிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மும்பை விமான நிலையத்திற்குள் ரோஹித் சர்மா நடந்து வந்தபோது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அவரது தனிப்பட்ட பாதுகாவலர், வழியில் குறுக்கே வந்த ஒரு முதியவரை கவனிக்காமல் தடுத்து நிறுத்தியுள்ளார்.

அதோடு இதை கவனித்த ரோஹித் சர்மா, உடனடியாக அந்த பாதுகாவலரை கோபத்துடன் பக்கவாட்டில் தள்ளிவிட்டு, முதியவர் கடந்து செல்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தார். மேலும், அந்த முதியவரை தடுத்ததற்காக தனது பாதுகாவலரை ரோஹித் சர்மா அங்கேயே கடிந்து கொண்டார்.

“>

இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், சமூக வலைதளப் பயனர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இருவேறு விதமான கருத்துக்கள் எழுந்துள்ளன. சிலர், “பாதுகாவலர் தனது கடமையைத்தான் செய்தார், ரசிகர்களிடம் இருந்து ரோஹித்தை பாதுகாக்க முயன்ற அவரை இப்படி பொதுவெளியில் திட்டியிருக்கக் கூடாது” என ரோஹித் சர்மாவின் செயலை விமர்சித்துள்ளனர்.

அதே நேரத்தில், மற்ற சில ரசிகர்களோ, “முதியவருக்கு மதிப்பளித்து, தனது பாதுகாவலரை கண்டித்த பிறகு, ரோஹித் அவரை தனியாக அழைத்து சமாதானப்படுத்தினார் இதில் எந்தவொரு தலைக்கணமும் இல்லை, அவரது மனிதநேயமே தெரிகிறது” என்று அவருக்கு ஆதரவாகவும் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.