தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் சிலர், அரசுப் பொறுப்புகளில் இல்லாதபோதும் தாம்பரம், தென்காசியில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ‘அம்மா’ உணவகங்களில் தன்னிச்சையாக ஆய்வு நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தைக் கண்டித்து தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த் கட்சியினருக்கு எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மக்கள் பிரதிநிதிகள் அல்லாதோர் அரசு சார்ந்த விவகாரங்களில் தலையிடுவதோ, ஆய்வுகள் மேற்கொள்வதோ கூடாது என்றும், தங்களின் எல்லை என்ன என்பதை அறிந்து தவெகவினர் செயல்பட வேண்டும் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
பொதுமக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் எவ்வித இடையூறும் இன்றி கண்ணியத்துடன் செயல்பட வேண்டும் என்றும், கட்சியின் பதவிகளைப் பயன்படுத்தி எவரும் தன்னிச்சையான அதிகார மையங்களாக மாறக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பொதுமக்கள் தங்களை உற்று நோக்கிக் கொண்டிருப்பதால், முதலமைச்சர் விஜய்யின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படாத வகையில் நடந்துகொள்வது அனைவரின் கடமை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தலைவர் விஜய்யின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் யாராவது செயல்பட்டால், அவர்கள் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்து உடனடியாக நீக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.
எளிய பின்னணியைக் கொண்டவர்கள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள இந்தச் சூழலில், தொண்டர்களின் ஒழுக்கமே தவெக அரசின் நீண்டகால வெற்றிக்கு அடித்தளமாக அமையும் என்று குறிப்பிட்டுள்ள அவர், நிர்வாகிகள் அனைவரும் அரசு நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, மக்கள் நலத்திட்டங்கள் அடித்தட்டு மக்களைச் சென்றடைய மட்டுமே உதவ வேண்டும் என்று தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
