உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள சதர் பஜார் பகுதியில், கேட்பதற்கே ரத்தத்தை உறைய வைக்கும் ஒரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எம்.டெக் (M.Tech) பட்டதாரியான பிரியங்கா பிஸ்வாஸ் என்ற இளம்பெண், கடந்த 5 மாதங்களுக்கு முன்பே உயிரிழந்துள்ளார்.

ஆனால், அவரது 76 வயது தந்தை உதய பானு பிஸ்வாஸ், யாருக்கும் தெரியாமல் மகளின் சடலத்துடன் அதே வீட்டில் வசித்து வந்துள்ளார். சடலம் அழுகி துர்நாற்றம் வீசாமல் இருப்பதற்காக, வீடு முழுவதும் ஏராளமான வாசனை திரவிய (Perfume) பாட்டில்களைப் பயன்படுத்தி மறைத்துள்ளார்.

உறவினர்களிடம் மகள் டேராடூனில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறி நம்ப வைத்துள்ளார். இந்நிலையில், நீண்ட நாட்களாக பிரியங்காவைக் காணாததால் சந்தேகமடைந்த உறவினர்கள், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது மெத்தையில் பிரியங்கா எலும்புக்கூடாகக் கிடப்பதைக் கண்டு அலறித் துடித்தனர்.

இதுகுறித்துத் தகவல் அறிந்த போலீஸார், எலும்புக்கூடை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, ஓய்வுபெற்ற அரசு ஊழியரான அந்தத் தந்தையைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 13 ஆண்டுகளுக்கு முன் தாய் இறந்த பிறகு, அந்தப் பெண் வெளி உலகத் தொடர்பின்றி வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.