கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மருதங்கோடு பகுதியில் அபிஷா (33) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 9 வருடங்களுக்கு முன்பு ஒரு வாலிபருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது 2 மகன்கள், ஒரு மகள் என 3 குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் அபிஷாவை வரதட்சணை கேட்டு அவருடைய கணவர் துன்புறுத்தியதோடு அடிக்கடி தகராறு செய்தும்  வந்துள்ளார். இதனால் தன் குழந்தைகளுடன் அபிஷா தன் தாய் வீட்டுக்கு சென்றதோடு ஒரு துணிக்கடையிலும் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் தன் கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பது அபிஷாவுக்கு தெரிய வரவே தன் கணவர் வீட்டின் முன்பாக குழந்தைகளுடன் சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்த தகவலின் பேரில் மார்த்தாண்டம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது அபிஷா நடந்ததை அவர்களிடம் கூறவே காவல்துறையினர் அவருடைய கணவருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர். அவர் நேற்று காலை வருவதாக கூறியிருந்த நிலையில் வரவில்லை. தற்போது தலைமறைவாக உள்ள வாலிபரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.