கோவையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணம் செய்து வரும் நிலையில், தனியார் பேருந்து ஒன்றில் அரங்கேறியுள்ள அதிர்ச்சி சம்பவம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

கோவையின் 5-ம் நம்பர் தனியார் பேருந்து ஒன்று டவுன் ஹால் பகுதியில் இருந்து சிவானந்தா காலனியை நோக்கி பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது, அதில் ஏறிய இளம்பெண் ஒருவர் வழக்கமான இருக்கைக்கு செல்லாமல், நேராக டிரைவர் சீட்டுக்கு அருகில் உள்ள கியர் பாக்ஸ் மீது அதிரடியாக அமர்ந்துள்ளார்.

பேருந்து ஓடிக்கொண்டிருக்கும் போதே, அந்தப் பெண் டிரைவருக்கு மிக நெருக்கமாக அமர்ந்து சிரித்துப் பேசி கொஞ்சி விளையாடியபடி வந்துள்ளார்.

இதனால் டிரைவருக்கு கடுமையான கவனச்சிதறல் ஏற்பட்டு, பேருந்தில் இருந்த பயணிகளின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை உருவானது.

இந்த ஆபத்தான காதல் லீலையை பேருந்தில் இருந்த பயணி ஒருவர் தனது செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, தற்போது அந்த வீடியோ நெட்டிசன்களை செம்ம கடுப்பாக்கி பயங்கரமாக வைரலாகி வருகிறது.