சவுதி அரேபியாவில் வேலைக்காக சென்ற இந்திய இளைஞர் ஒருவர் தன்னை மீட்க உதவுமாறு வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட பல அரபு நாடுகளில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் சிலர் மீது அந்நாட்டு முதலாளிகள் துன்புறுத்தல் நடத்துவதாக அடிக்கடி குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சவுதி அரேபியாவிற்கு வேலைக்காக சென்றுள்ளார். அவரை வேலைக்கு அமர்த்திய நபர், அவரது பாஸ்போர்ட்டு உள்ளிட்ட ஆவணங்களை பறித்துக்கொண்டு பாலைவனப் பகுதியில் ஒட்டகம் மேய்க்க அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தன்னை மீட்குமாறு கோரி அந்த இளைஞர் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். “என்னை வேலைக்கு எடுத்தவர், என்னைக் கொலை செய்யப்போவதாக மிரட்டுகிறார். தயவுசெய்து எனை இந்தியாவுக்கு திரும்ப உதவுங்கள். பிரதமர் மோடி எனக்கு உதவி செய்ய வேண்டும்,” என்று அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலானது. இதையடுத்து சவுதி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த இளைஞருக்கும் அவரை வேலைக்கு அமர்த்தியவருக்கும் இடையே எவ்வித பிரச்சினையும் இல்லை என்றும், சமூகவலைதளங்களில் வைரல் ஆகும் நோக்கில் வீடியோ வெளியிடப்பட்டதாகவும் சவுதி போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, வைரல் வீடியோவில் காணப்படும் நபரை தொடர்புகொள்ள முயற்சி நடைபெற்று வருவதாகவும், அவரது துல்லியமான இருப்பிடம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் சவுதியில் உள்ள இந்திய தூதரகம் விளக்கியுள்ளது.

மேலும் இந்த சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி, வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்தியர்களின் பாதுகாப்பு மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.