பீகாரில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையிலும், அம்மாநிலத்திற்குள் மதுபானங்களை கடத்துவதற்காக கடத்தல்காரர்கள் பயன்படுத்தும் வினோதமான மற்றும் அதிநவீன தொழில்நுட்ப உத்திகள் காவல்துறையினரையே அதிர வைத்துள்ளன. தனபாத்திலிருந்து பாட்னா நோக்கி வந்த கங்கா-தாமோதர் எக்ஸ்பிரஸ் ரயிலில், ரகசியத் தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது, ரயிலின் மேற்கூரை பகுதியில் உள்ள நட் மற்றும் போல்ட்டுகளைக் கழற்றி, அதற்குள் மிகச் சாதுரியமாக மதுபாட்டில்களை மறைத்து வைத்திருந்த ‘ஹைடெக்’ கடத்தல் அம்பலமானது. இந்த நூதனமான கடத்தல் பொறியியலைக் கண்டு சோதனையிட்ட காவல்துறையினரே ஒரு நிமிடம் திகைத்துப் போயினர்.

“>

இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரயிலின் மேற்கூரைக்குள் இருந்து டஜன் கணக்கிலான வெளிநாட்டு மதுபாட்டில்களைப் போலீசார் ஒவ்வொன்றாக வெளியே எடுப்பது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இதனால் மதுவிலக்கு சட்டத்தை ஏமாற்ற கடத்தல்காரர்கள் கேஸ் சிலிண்டர், டிஜே பாக்ஸ் போன்ற பல்வேறு உத்திகளைக் கையாண்டு வரும் நிலையில், இந்த ரயில் சீலிங் கடத்தல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ரயில்வே போலீசார், இந்த அதிநவீன கடத்தல் பின்னணியில் உள்ள கும்பலை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.