பிரெஞ்சு மொழி ஆசிரியரான பியான்கா லாலா சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ள ஒரு சுவாரசியமான உண்மைச் சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சுவிட்சர்லாந்தில் தனது புதிய ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்குவதற்காக, ஆகாஷ் என்ற இந்தியத் தொழில்முனைவோர் ஒரே வாரத்தில் பிரெஞ்சு மொழியைக் கற்க முயன்றதே இந்த கதையாகும்.

இதுகுறித்து பொதுவாக ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்ள பல மாதங்கள் ஆகும் என்ற நிலையில், ஆகாஷ் வெறும் ஒரு வாரத்தில் பிரெஞ்சு மொழியின் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ள பியான்காவிடம் ஒரே நாளில் 7.5 மணி நேரம் ஆன்லைன் வகுப்புகளைப் பதிவு செய்துள்ளார்.

“>

ஆனால் முதலில் இது ஏதோ தவறுதலாக நடந்திருக்கும் என்று நினைத்த பியான்கா, ஆகாஷிடம் விசாரித்தபோது, தனக்கு இன்னும் ஒரு வாரத்தில் சுவிட்சர்லாந்தில் நிறுவனத் தொடக்க விழா இருப்பதாகவும், அதற்குள் எப்படியாவது பிரெஞ்சு மொழியைக் கற்க வேண்டும் என்ற தனது அசாத்திய இலக்கைக் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் தினமும் தொடர்ந்து 7 மணி நேரம் தீவிரமாகப் படித்து, ஒரு வாரத்திற்குள் வியக்கத்தக்க வகையில் பிரெஞ்சு மொழியின் முக்கியப் பகுதிகளைக் கற்று முடித்தனர். ஆரம்பத்தில் அடிப்படை கூடத் தெரியாமல் இருந்த ஆகாஷ், தனது அசாத்திய கடின உழைப்பால் குறுகிய காலத்தில் காட்டிய முன்னேற்றத்தைக் கண்டு ஆசிரியை பியான்கா முற்றிலும் வியந்துபோனார்.

இந்த சம்பவத்தை வீடியோவாகப் பகிர்ந்த அவர், “மனிதர்களின் வேலைகளைப் பறித்துவிடும் என்று சாட்ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை நினைத்துப் பயப்பட வேண்டாம். மாறாக, மிகக் குறுகிய காலத்தில் எதையும் சாதித்துக் காட்டும் ஆகாஷ் போன்ற இந்தியர்களைப் பார்த்துதான் மற்றவர்கள் பயப்பட வேண்டும்” என்று நகைச்சுவையாகவும் பெருமையாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்தியர்களின் இந்த அசாத்திய உழைப்பையும் திறனையும் பாராட்டும் இந்த செய்தி தற்போது இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.