கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் சப்தரிஷி தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு மணிகண்டனும் அதே பகுதியில் வசிக்கும் சத்திய பிரியாவும்(26) காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு 4 வயதில் மகள் இருக்கிறார். மணிகண்டன் சென்னையில் தங்கி காய்கறி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்த மணிகண்டன் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததாக தெரிகிறது. இதனை சத்தியபிரியா கண்டித்ததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த சத்திய பிரியா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.